மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்பவேண்டி அறிவிப்பு
உத்தம நிறுவனத்தின் செயற்குழு வருகிற 2011 சூன் மாதம் பதினேழாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதி வரை உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்திட முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் இம்மாநாட்டினை நடத்திட இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணி செய்துவரும் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மேன் அவர்களும் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களும் இம்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமையேற்று நடத்தித்தர இசைந்துள்ளனர். நமது முன்னாள் தலைவர் கு. கல்யாணசுந்தரம் இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவுக்குத் தலைமையேற்கவும் இசைந்துள்ளார். உத்தமத்தின் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் தமிழ் இணையம் 2011 பன்னாட்டுக்குழுத் தலைவராகச் செயல்படுவார்.
இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் குழு ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் கட்டுரைகளைப் பெற்று அவற்றின் சிறந்த கட்டுரைகளை மாநாட்டில் படைத்திடும் வழிவகைகளைச் செய்வதோடு இம்மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் சிறப்புச் சொற்பொழிவு ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும். இம்மாநாட்டின் மையக் கருத்தாக “கணினியினூடே செம்மொழி” என்னும் தலைப்பில் கணினி வழியாகத் தமிழ் மொழி இலக்கியங்களைச் செவ்வனே ஆய்ந்தறியும் வழிவகைகளைப் பற்றிக் கலந்துரையாட முனைந்துள்ளோம்.
இம்மாநாட்டில் கட்டுரைகளைப் படைக்க விரும்புவோர் கணினி வழித் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும் வழிவகைள் குறித்தும் கணினி வழித் தமிழ் ஆய்வுகள் குறித்தும் தங்களின் கட்டுரைச் சுருக்கங்களை மார்ச்சு மாதம் 15ஆம் தேதிக்குள் ti2011@infitt.org என்னும் முகவரியில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். வெளிநாட்டுக் கட்டுரையாளர்கள் தங்களின் பணி நிறுவனங்களினின்று இதற்கான நிதியுதவியை விரைவில் பெறவும் அமெரிக்க நாட்டின் கடவுச் சீட்டினை விரைவில் பெறவும் தங்களின் கட்டுரைச் சுருக்கம் எங்களை அடைந்தவுடன் எங்கள் முடிவுகளை உடனுக்குடன் தங்களுக்குத் தெரிவிக்க முயல்வோம்.